நிக் அஜிஸ்: பாத்வா மன்றம் ஒரு கண்ணால் பார்க்கிறது

அண்மையில் நடைபெற்ற பெர்சே 3.0 என்னும் தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணி, கட்டுக்கு அடங்காத கலகக்கார கூட்டம் என வருணித்து பாத்வா வெளியிட்டுள்ள தேசிய பாத்வா மன்றத்தை  பாஸ் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கடுமையாக சாடியுள்ளார்.

“அவர்கள் ஒரு கண்ணால் மட்டும் பார்த்து விட்டு அறிக்கை வெளியிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.”

“உடைந்த கண்ணாடிகளை போட்டுக் கொண்டு ஒரு கண்ணால் மங்கலான பார்வையுடன் அவர்கள் அதனைப் பார்த்திருக்க வேண்டும்,” என தமது அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் சேர்த்துள்ள அறிக்கையில் அவர் சொன்னார்.

என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய, பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவிக்கக் கூடிய எந்த ஒரு கூட்டமும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அந்த பாஸ் தலைவர் ஒப்புக் கொண்டார்.

அந்த வகையில் மட்டுமே தாம் அந்த மன்றத்துக்கு உயரிய மதிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்ட நிக் அஜிஸ், சூழ்நிலை குறித்து அவர்கள் செய்துள்ள மதிப்பீட்டைத் தாம் ஏற்கவில்லை என்றார்.