‘நல்ல கம்யூனிஸ்ட்கள் மட்டுமே பெர்சே-யை ஆதரிக்கின்றனர்’

பெர்சே 2.0 பேரணியில் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் கூறியுள்ளதை பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான ஹிஷாமுடின் ராயிஸ் நிராகரித்துள்ளார்.

ஹனீப் சொல்வது போல ஏப்ரல் 28 பேரணியில் கம்யூனிஸ்ட்கள் சம்பந்தப்பட்டிருந்தால்  அவர்கள் ‘நல்ல கம்யூனிஸ்ட்களாக’ இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கான பெர்சே கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தன என ஹிஷாமுடின் கிண்டலாகக் கூறினார்.

“பெர்சே பேரணிக்கு வந்தவர்களில் பலர் கம்யூனிஸ்ட்கள் என அவர் சொன்னால் சரி தான். ஏனெனில் அவர்கள் நல்ல கம்யூனிஸ்ட்கள். தேர்தல் ஆணைய மோசடிகளை அவர்கள் எதிர்க்கின்றனர். அதனால் கம்யூனிட்களின் போராட்டம் புனிதமாகிறது.”

1970ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் சிந்தாந்தததைப் பரப்பும் நோக்கத்துடன் ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட கம்யூனிஸ்ட் அனுதாபிகள் ஏப்ரல் 28 பேரணியை முன்னின்று நடத்தியதாக ஹனீப் குறிப்பிட்டிருந்தார். அவர் ஹிஷாமுடினையும் அவரது சகாக்களையும் தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

1970களில் ஹிஷாமுடின் பிரபலமான இடச்சாரி மாணவர் போராளியாகத் திகழ்ந்தவர். பெர்சே 3.0 பேரணியில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

போலீஸ் முரட்டுத்தனம் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சுயேச்சைக் குழுவுக்கு ஹனீப் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பற்றிக் கருத்துரைத்த ஹிஷாமுடின், அந்த முன்னாள் ஐஜிபி சுதந்திரமாக செயல்பட முடியாதவர். நம்பகத்தன்மை இல்லாதவர் என்றார்.

“அந்தக் குழுவுக்குத் தலைவராக ஹனீப் ஒமாரை நியமித்துள்ளது, கோடீஸ்வர வணிகரான வின்செண்ட் தான்-இடம், பைத்துல்மாலை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு அல்லது வெள்ளிக் கிழமை தொழுகை உரையை நிகழ்த்தும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஒப்பாகும். ஹனீப் அதற்குப் பொருத்தமானவர் அல்ல,” என்றார் அவர்.