பெர்க்காசா நடத்திய “ஈமச் சடங்குகளை” பினாங்கு அம்னோ கண்டிக்கிறது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் வீட்டுக்கு வெளியில் பெர்க்காசா அண்மையில் நடத்திய ஆட்சேபக் கூட்டத்தையும் “ஈமச் சடங்குகளையும்” பினாங்கு அம்னோ கண்டித்துள்ளது.

மே 10ம் தேதி நடத்தப்பட்ட அதனை கட்சி அங்கீகரிக்கவில்லை என மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் கூறினார்.

வீட்டுக்கு வெளியில் லிம் படத்தை மாட்டிய பெர்க்காசா குழுவினர், லிம் மலாய் சமூகத்துக்கு “மரணமடைந்து விட்டதை” குறிக்கும் வகையில் அந்தப் படத்துக்கு மலர் மாலையும் சாற்றினர்.

“அந்த நடவடிக்கையை அம்னோ உறுப்பினர்கள் அங்கீகரிக்கவில்லை, வழி நடத்தவில்லை அல்லது ஒப்புக் கொள்ளவில்லை,” என இன்று மாநில பிஎன் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜைனல் நிருபர்களிடம் கூறினார்.

“எங்களுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. அதனைச் செய்ய வேண்டாம் என சொல்வதற்கும் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் எங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.”

பெர்க்காசா அரசு சாரா அமைப்பு அம்னோ அரசியல் கட்சி என முன்னாள் நிபோங் திபால் எம்பி-யான ஜைனல் குறிப்பிட்டார்.

லிம்-மின் தனிப்பட்ட வீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆட்சேபத்திற்கு அம்னோ திட்டமிட்டதும் என்றும் பெர்க்காசா அந்தக் கட்சியுடன் இணைந்துள்ளது என்றும் கூறப்படுவது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது ஜைனல் அவ்வாறு கூறினார்.

பெர்க்காசாவின் ஆட்சேபங்கள் பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாதாரின் உணர்வுகளைத் தொடுவதால் கெரக்கான், மசீச-வுக்கான மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு குறைவதாக சொல்லப்படுகிறது.