பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விருப்பம்

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் விரும்புவது தெரிய வந்துள்ளது.

பெர்சே பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதனை சுயேச்சை அமைப்பான மெர்தேக்கா மய்யம் மேற்கொண்டது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின் போது மொத்தம் 1019 பேர் பேட்டி காணப்பட்டனர்.

அவர்களில் 92 விழுக்காட்டினர், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என கூறினர்.

இன, வருமான, வட்டார வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவிலும் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஒரே பிரிவைச் சார்ந்தவர்களில் பாதிப்பேர் அல்லது 48 விழுக்காட்டினர், நடப்பு வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.