பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசும் தகுதி மசீசவுக்கு இல்லை

பல ஊடகங்களில் பங்குரிமை வைத்துக்கொண்டு அவற்றின் செய்திசேகரிப்பிலும் பிரசுரிப்பிலும் தலையீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் மசீச, பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றது.

அண்மையில் செய்தித்தாள்களுடன் மோதிக்கொண்ட பினாங்கு முனிசிபல் கவுன்சிலர் ஒங் ஆ தியோங்,  ஊடகச் செயல்பாட்டில் தலையிடாமை என்ற அடிப்படைக் கொள்கையைக்கூட மசீச மதிப்பதில்லை சாடினார்.

“செய்தித்தாள்களையும் செய்தி நிறுவனங்களையும் வைத்துள்ள மசீச பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுவது வியப்பாக உள்ளது”, என்று ஒங் குறிப்பிட்டார்.

மசீச, அதன் முதலீட்டுப் பிரிவான ஹுவாரென் ஹோல்டிங்ஸ்வழி, ஆங்கிலமொழி நாளேடான த ஸ்டார் உள்பட, பல ஊடக நிறுவனங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அவற்றில் செய்திகளைக் குறிப்பாக எந்தெந்த அரசியல் நிகழ்வுகள் பற்றிச் செய்திகளைச் சேகரிக்கலாம் என்பதை மசீச அரசியல்வாதிகள்தாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவு செய்கிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம் என்று ஒங் கூறினார்.

ஒங், பினாங்கு மசீச ஆலோசகர் கோய் கார் ஹுவா(வலம்), மாநில அரசு “ஊடகத் தணிக்கைமுறையை”ப் பின்பற்றுவதாகக் குறைகூயிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது இப்படிக் கூறினார்.தம் செய்தியாளர் கூட்டத்தில் உத்துசான் மலேசியா மற்றும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று  ஒங் தடைவிதித்ததைத்தான் ஊடகத் தணிக்கைமுறை என்று கோய்  குறிப்பிட்டார்.

‘முடிவுசெய்யும் உரிமை’

மாநில அரசால், ஆக்கப்பூர்வமான குறைகூறல்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்று கோய் குறைகூறினார்.

மற்ற ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திசேகரிக்க அனுமதிக்கப்படும்போது உத்துசான் மலேசியா மற்றும் என்எஸ்டி-க்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று அவர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த ஒங், அவர்களின் செய்தித்தாள்கள்,  தாம் கூறுவனவற்றைத் “திரித்துக் கூறும் வழக்கத்தை”க் கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டார்.

“என்னைப் பற்றிய செய்திகளைப் போடுவதா வேண்டாமா என்று முடிவுசெய்யும் உரிமை செய்தித்தாள்களுக்கு உண்டு.அதேபோல் செய்தியாளர் கூட்டம் நடத்தும் எனக்கு, அதற்கு யார் யாரை அழைக்கலாம் என்று முடிவெடுக்கும் உரிமை உண்டு.

“நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இரட்டை நியாயம் கூடாது என்று கூறும் நாளேடுகள் அவையும், பிஎன் அல்லது பக்காத்தான் அரசியல்வாதிகள் விசயத்தில் இரட்டை நியாயத்தைப் பின்பற்றக்கூடாது”, என்றார்.