பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன் கூறினார்.

2007-இல், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டைவிட்டுத் தப்பியோடிய வேதமூர்த்தி இப்போது ஐநா வழங்கிய பயண ஆவணத்தை வைத்து பயணம் செய்து வருகிறார். அவரது மலேசிய கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

“அந்த ஐநா ஆவணம் மலேசியா தவிர எல்லா நாடுகளுக்கும் செல்லலாம் எனக் கூறுகிறது. ஆனால், எதையும் எதிர்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்”, என்று கணேசன் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் இன்று  கூறினார்.