கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘ஆரோக்கியமற்ற’ புகை மூட்ட நிலைமை

நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ள புகை மூட்ட நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பல இடங்களில் ‘ஆரோக்கியமற்ற’ நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மணி 7 தொடக்கம் முற்பகல் 11 மணி வரையில் நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 101க்கும் 200க்கும் இடையில் உயர்ந்தது.

சிலாங்கூரில் எட்டு இடங்களில் பதிவான விவரங்கள் வருமாறு: பெட்டாலிங் ஜெயா (131), கோலாலம்பூர் (பத்து மூடா 128), செராஸ் (133), போர்ட் கிளாங் (142). இவை மிக உயர்வான குறியீடுகளாகும்.

கோலா சிலாங்கூர் புத்ராஜெயா, நீலாய் (நெகிரி செம்பிலான்) ஆகியவற்றிலும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 100க்கு மேல் அதிகரித்துள்ளது.

அண்டை நாடான இந்தோனிசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் பரவிய  புகை மலேசியாவின் 80 விழுக்காட்டுப் பகுதியைக் குறிப்பாக மேற்கு மலேசியாவைப் பாதித்துள்ளது. சபா, சரவாக்கின் கிழக்குக் கரையோரப் பகுதிகள் மிதமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய பதிவுகள் நேற்றைக் காட்டிலும் நிலைமை மோசமடைந்துள்ளதைக் காட்டுகின்றன.