எச்ஆர்பி பதிவு மீதான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

தன்னை ஒரு கட்சியாக பதிவு செய்யுமாறு சங்கப் பதிவகத்துக்கும்(ஆர்ஓஎஸ்) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி), செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதனை நிராகரித்த நீதிபதி ரொஹானா யுசுப், அவ்வாறு கேட்டுக்கொள்ளும் உரிமை எச்ஆர்பிக்கு இல்லை என்றார்.

அத்தீர்ப்பை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துகொள்ளப்படும் என்று எச்ஆர்பி இடைக்காலச் செயலாளர் பி.உதயகுமார் கூறினார்.

“மலேசிய வரலாற்றில் பதிவு மறுக்கப்பட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் எச்ஆர்பி-யும் ஒன்று.அண்மையில் பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா(Parti Ikatan Bangsa Malaysia)வுக்கும் மேலும் 33 அரசியல் கட்சிகளுக்கும்  பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால், எச்ஆர்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டது”, என்றாரவர்.

2011 அக்டோபர் 11-இல், உதயகுமாரும் எச்ஆர்பி-யும் அம்மனுவைச் செய்தனர்.அதில், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், சங்கப் பதிவகம், கூட்டரசு ஆர்ஓஎஸ் ஆகியோர் எதிர்வாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டனர்.