பாபியா குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என ராபிஸி விண்ணப்பம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்தியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி ராம்லி விண்ணப்பித்துக் கொண்டுள்ளார்.

“அந்த முழு நடவடிக்கையும் தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க வழக்குரைஞர்களின் அதிகார அத்துமீறல்,” என அவரது வழக்குரைஞர் என் சுரேந்திரன் கூறினார்.

“அத்துடன் அது பொதுக் கொள்கைக்கு முரணானது. காரணம் பொது நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை ராபிஸி அம்பலப்படுத்தியுள்ளார்,” என அவர் இன்று நீதி மன்றத்துக்கு வெளியில் கூறினார்.

என்எப்சி, அதன் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் ஆகியோரது நான்கு நிதிக் கணக்குகளை ஊடகங்களுக்கு வெளியிட்டதின் மூலம்  பாபியா எனப்படும் வங்கி, நிதி நிறுவனச் சட்டத்தின் 97வது விதியை மீறியதாக ராபிஸி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடமிருந்து பெற்ற 250 மில்லியன் ரிங்கிட் பெறும் எளிய கடனை முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவருமான முகமட் சாலே-யும் அவரது பிள்ளைகளும் சொந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தியதாக ராபிஸி கூறிக் கொண்டிருந்தார்.

முகமட் சாலே, மொத்தம் 49.7 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்களையும் 1965ம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்கியுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளைக் கொள்முதல் செய்ததுடன் தொடர்புடையதாகும்.

என்எப்சி -யை சூழ்ந்துள்ள ஊழலைத் தொடர்ந்து ஷாரிஸாட் கடந்த ஏப்ரல் மாதம் தமது செனட்டர் பதவிக் காலம் முடிந்ததும் இன்னொரு தவணைக் காலத்துக்கு அமைச்சராக இருப்பதை நாடவில்லை.

TAGS: