பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பகுதிக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அமைதி ஒப்பந்தமொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார்.

பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் (எம்ஐஎல்எஃப்) நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த புதிய உடன்பாடு, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் தென் பகுதிக்கு புதிய தன்னாட்சி அலகாக அங்கீகரிக்கிறது.

எம்ஐஎல்எஃப் இயக்கம் இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ‘மிக்க மகிழ்ச்சி’ அடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேஷியாவில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் வரும் அக்டோபர் 15-ம் திகதி அதிகாரபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இருதரப்புக்குமிடையில் அமைதிப் பேச்சுக்களுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், அவை வன்முறைகளால் முறிவடைந்துபோனமை குறிப்பிடத்தக்கது.

-BBC