நஸ்ரி: பெர்சே தலைவர்கள் சட்டத்தை மீறியதால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

பெர்சே தலைவர்கள் ‘பெர்சே’ என்று அழைத்துக் கொள்வதற்காக அல்லாமல் சட்டத்தை மீறியதற்காகத்தான் அரசாங்கம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது என்பதை வலியுறுத்துகிறார் நடப்பில் சட்ட அமைச்சர்.

“சட்டத்தை மீறினார்கள், அதனால் நடவடிக்கை எடுக்கிறோம். உண்மையில் அவர்கள் ‘பெர்சே (சுத்தமானவர்களாக) ஆக இருக்க நினைத்தால் சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும்”, என்று முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

பி.இராமசாமி (டிஏபி- பத்து கவான்)யின் துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நஸ்ரி, பெர்சே தலைவர்கள் எந்தப் பெயரிட்டும் தங்களை அழைத்துக்கொள்ளலாம்,  அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றார்.

“என்னை நான் கேஎல் கேங்ஸ்டர் என்று சொல்லிக்கொள்ளலாம். எந்தப் பெயரையும் வைத்துக்கொள்ளும் உரிமை எல்லாருக்கும் உண்டு”.

ஆனால், அந்த உரிமை உண்டு என்பதற்காக எதையும் செய்யலாம் என்று ஆகி விடாது. அவர்களும் சட்டங்களை மதிக்கத்தான் வேண்டும் என்றார்.