அம்னோவின் கை சுத்தமாக இருந்தால் பணத்தைக் கடத்த வேண்டியதில்லையே

உங்கள் கருத்து: “நஸ்ரி, ரிம40 மில்லியனைக் கடத்துவது குற்றமில்லையா? அக்குற்றம் புரிந்த சாபா அம்னோமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”

ரிம40 மில்லியன் நன்கொடையைப் பெற்றது குற்றமில்லை என்கிறார் நஸ்ரி

1மலேசியா2சமயம்: சுவாராம் வெளிநாட்டிலிருந்து சட்டப்பூர்வமாக வங்கிகள்வழி பண உதவி பெற்றதை பிஎன் சட்டவிரோதம் என்று கூறியது.

இப்போது மைக்கல் சியா, ரிங்கிட்டில் அல்லாமல் சிங்கப்பூர் டாலரை கமுக்கமாக மலேசியாவுக்குள் கடத்தி வரப் பார்த்தார். இது அப்பட்டமான ஊழல் அல்லவா.

நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் அவர்களே, இது சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, நன்னெறியும் சம்பந்தப்பட்டுள்ளது. அம்னோவின் கை சுத்தமாக இருந்தால் ரிம40மில்லியனைக் கையில் எடுத்துவர வேண்டிய தேவை இல்லையே. 

எச்ஒய்எல்: ஹாங்காங்கிலிருந்து ரிம40 மில்லியன் கடத்திக்கொண்டு வரப்பட்டதில் பிரச்னை எதுவுமில்லை என்றால், சுவாராம் எங்கிருந்து பணம் பெற்றால் என்ன, அதை ஏன் பெரிய பிரச்னை ஆக்க வேண்டும்? .  
சிக்: அரசியல் நன்கொடைகளை வெளிப்படையாகவும் சட்டப்படியும் வழங்குவது தப்பில்லை. ஆனால், பணம் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதும் அதைக் கடத்த முயலும் நபர் கையும் களவுமாக பிடிபட்டதும்தான் பல கேள்விகளை எழுப்புகின்றன.

நஸ்ரி அவர்களே, பணத்தை  மலேசியாவுக்குள் கடத்திவர வேண்டிய அவசியம் என்ன, அதற்குப் பதில் சொல்லுங்கள்.

பெயரிலி #19098644: அந்த “நன்கொடையை” வழக்கமான வழிகளில் அனுப்பி வைத்து அதை அரசியல் நன்கொடை எனக் கணக்கில் பதிவு செய்திருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை. அப்படி செய்யாததால் அது பணத்தைச் சலவை செய்யும் முயற்சி, வரி ஏய்ப்பு, ஊழல் என்றுதான் பொருள்படும். 

எதற்காக ஒரு நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் ரிம40 மில்லியன் நன்கொடை கொடுக்க வேண்டும்? குத்தகை பெறவா, சலுகைகள் பெறவா…?

பெயரிலி_3e86:சில நூறாயிரம் ரிங்கிட்டுக்காக அரசுத் துறைகள் சுவாராமை விரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ரிம40 மில்லியன் விசயத்தில் பரவாயில்லை என்கிறீர்கள். ஸ்டார் ட்ரேக் படத்தில் வரும் திரு. ஸ்பூக்கின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்: “அறிவுக்குப் பொருத்தமாகப் படவில்லையே”.

நியாயவான்: நஸ்ரி, ரிம40 மில்லியனைக் கடத்துவது குற்றமில்லையா? அக்குற்றம் புரிந்த சாபா அம்னோமீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

உங்கள் விளக்கத்தைக் கேட்டு வாயை மூடிக்கொண்டிருக்க மக்கள் என்ன முட்டாள்களா? அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து நன்கொடை பெறுவது தப்பல்ல என்றால், ஜெர்மனியிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் அரை மில்லியனை நன்கொடையாக பெற்ற ஒரு என்ஜிஓ விசயத்தில் பிஎன் அரசு குதியாய் குதித்தது ஏன்?