பிஎன் எல்லா நம்பிக்கை சீட்டுக்களையும் பயன்படுத்தி விட்டது

najib“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்”

என் மீது நம்பிக்கை வையுங்கள் என நஜிப் இந்தியர்களிடம் மன்றாடுகிறார்

Shyyyyyy: “அரசாங்க உதவி பெறாத தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை கட்டம் கட்டமாக முழு அரசாங்க உதவிகளைப் பெறும் பள்ளிக்கூடங்களாக மாற்றும் சாத்தியம் பற்றித் தாம் கல்வி அமைச்சருமான துணைப்பிரதமர் முஹைடின் யாசினுடன் விவாதிக்கப் போவதாக பிரதமர் மேலும் கூறினார்.”

திரு.பிரதமர் அவர்களே இப்போது தான் அதனை உணர்ந்து கொண்டீர்களா ? அதுவும் இந்தியர் வாக்குகளைப் பெறுவதற்கு அரும்பாடுபடும் வேளையில். குறைந்த நிதிகளுடன் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எவ்வளவு ஆண்டுகள் சிரமப்பட்டிருக்கும்?

மஹாஷித்லா: மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு-வுக்கு நம்பிக்கை என்பது சி4 வெடி மருந்து ஆகும்.  தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்துக்கு அவர் இந்தியாவில் தொடர்ந்து மறைவாக வாழ்வதுடன் 5 மில்லியன் ரிங்கிட் பாக்கியையும் மறந்து விட வேண்டும்.

இந்துக்களுக்கும் பிஎன் அங்கீகரித்த பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்துக்கு நீங்கள் பிஎன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் அந்தத் திட்டம் ரத்துச் செய்யப்படும்.

நம்பிக்கை வைக்குமாறு பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இந்துக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. உண்மையில் இந்தியர்கள் யார் மீதும் எளிதாக நம்பிக்கை வைக்கக்கூடாது.

லூயிஸ்: நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

‘இண்டர்லாக்’ புத்தகம் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என இந்தியர்கள் முறையிட்டனர். முஹைடின் அவர்களை அலட்சியம் செய்தார். அகராதியிலிருந்து ‘keling’ என்ற சொல்லை எடுக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர்.  வெற்றி கிடைக்கவில்லை. குப்பைத் தொட்டிகளைப் போல கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. அப்போது இந்தியர்களுடைய கூக்குரல் நஜிப் காதுகளுக்கு எட்டவிலை.

அண்மைய காலமாக அதிகாரிகளின் கைகளில் பல இந்தியர்கள் மரணமடைந்தது பற்றி எந்த விளக்கமுமில்லை.  எதிர்க்கட்சிகளே அவர்களுக்கு உதவுகின்றன. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது வழக்கமான இரட்டை வேட பாணியில் தடயவியல் அறிக்கையைக் கோரியுள்ளார். அது நிச்சயம் குப்பைக் கூடைக்குத் தான் போகும்.

நஜிப்பின் இழுவைக்கு இந்தியர்கள் மயங்கினால் எதிர்காலத்தில் அம்னோ அவர்களை கைவிடுமானால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். 50 ஆண்டுகள் நிறைந்தும் அம்னோ இன்னும் மாறவில்லை. அதன் ஊழலே மேலும் அதிகமாகும்.

பூமிஅஸ்லி: நம்பிக்கை என்பது கேட்டுப் பெற வேண்டிய விஷயமல்ல. நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதை மெய்பிக்க வேண்டும். அடுத்து மக்கள் உங்களுக்கு வாக்களிப்பர். பல ஆண்டுகளாக இந்தியர்களை பாரபட்சமாக நடத்திய பின்னர் பிரதமர் செய்ய வேண்டியது எல்லாம் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற  வேண்டும். வெறும் பேச்சோடு நிற்கக் கூடாது.

உங்களுக்கு வாக்களிக்க இந்தியர்கள் பிச்சை கேட்கவில்லை. உரிமையுள்ள குடிமக்களாக தாங்கள் அங்கீகரிக்கப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர்.

கீ துவான் சாய்: பிஎன் -னுக்கு இந்தியர்களை வாக்களிக்கச் செய்வதில் நஜிப் வெற்றி பெற்று விடுவார் எனத் தோன்றுகிறது. சனிக்கிழமை பொங்கல் கொண்டாட்டத்தில் 100,000 பேர் கலந்து கொண்டார்கள். பெர்சே 3.0, மக்கள் எழுச்சிப் பேரணி ஆகியவற்றிலும் அதே எண்ணிக்கையிலான மக்களே பங்கு கொண்டார்கள்.

நஜிப் மீதும் பிஎன் மீதும் அதிகமான இந்தியர்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்களிடையே அவரது செல்வாக்குக் கூடியுள்ளது. அதனால் பொதுத் தேர்தல் முடிவுகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியர் வாக்குகளைக் கொண்டு அவர் பிஎன் -னை வெற்றி பெறச் செய்வதோடு கூடுதல் இடங்களையும் பெறக் கூடும். உண்மையில் அச்சமளிக்கும் சூழ்நிலை தான்.

அனோன்_1064: தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிகளை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவது பற்றி முஹைடினுடன் விவாதிக்கப் போவதாக நஜிப் சொல்லியிருக்கிறார்.

50 ஆண்டுகள் ஒடி விட்டன. இன்னும் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது ?

கறுப்பு வீரன்: தமிழ்ப் பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என டிஏபி, ஹிண்ட்ராப், பல அரசு சாரா அமைப்புக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றன. ஆனால் அம்னோ மூச்சே விடவில்லை.

இப்போது நஜிப்பின் அரசியல் வாழ்க்கை தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் (intensive care unit) உள்ளது.  அதனால் திடீரென அதற்கான தேவையை நஜிப் உணர்ந்துள்ளார். அதுவும் துணைப் பிரதமருடன் பேசப் போவதாக மட்டுமே அவர் சொல்லியிருக்கிறார். மலேசிய இந்தியர்கள் அந்த மாயாஜாலத்திற்கு மயங்கினால் பெருத்த வெட்கக்கேடு.

 

TAGS: