கட்சி ஆதரவாளர்கள் முதிர்ச்சியை காட்ட வேண்டும் என்கிறார் இப்ராஹிம் அலி

aliஅரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றும் உணர்ச்சி வயப்பட்டு விரும்பதகாத சம்பவங்களுக்கு வழி வகுத்து விடக் கூடாது.

இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, பொதுத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பொறுப்புணர்வைக் காட்ட வேண்டும் என்றார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள் இருப்பதால் அமைதி சீர்குலைந்து தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படக் கூடும் என அவர் சொன்னார்.

“வரும் பொதுத் தேர்தலை அமைதியாக எதிர்கொள்ளுமாறு நாங்கள் மலேசியர்களைக் கேட்டுக் கொள்கிறோம். எந்த ஒரு கட்சிக்கும் முடிவுகள் சாதகமாக இல்லை என்றால் குழப்பத்தை ஏற்படுத்துவதின் மூலம் சட்டத்தை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என அவர் நேற்று பெர்க்காசா உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ள தெரு ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் அமைதியையே குலைத்து விடும். அதனால் எல்லாத் தரப்புக்களுக்கும் நன்மை இல்லை என்றும் இப்ராஹிம் சொன்னார்.

பெர்னாமா