கோலாலம்பூரில் அனைத்துலகத் தாய்மொழி தினம்

International mother tongue day 2013அனைத்துலகத் தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவில் நாளை (பெப்ரவரி 21, 2013) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படவிருக்கிறது.

இவ்விழாவை மலேசிய செயல் கூட்டமைப்பின் (Gabungan Bertindak Malaysia) ஆதரவுடன் தமிழ் அறவாரியம் மலேசியா, லிம் லியன் கியோக் பண்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தின் மேம்பாடு மையமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

ஐநாவின் யுனெஸ்கோ பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி தினமாக 1999 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டிலிருந்து அனைத்துலகத் தாய்மொழி தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்களுடைய தாய்மொழியான வங்காள மொழியை வங்காளத்தின் (அன்றைய கிழக்கு பாக்கிஸ்தான்) தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி பெப்ரவரி 1952 இல் கிழக்கு பாக்கிஸ்தான் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் பங்கேற்ற டாக்கா பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் – அப்துல் சலாம், ரபிக் உடின், அப்துல் பர்காத், அப்துல் ஜபார் – போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இறுதியில், வங்காள தேசம் என்ற தனிநாடு 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பெப்ரவரி 21 ஆம் நாள்தான் அனைத்துலகத் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாளை நடைபெறவிருக்கும் அனைத்துலகத் தாய்மொழி தின நிகழ்ச்சியில் பல்லின கலை நிகழ்ச்சிகளோடு மலாயா பல்கலைக்கழத்தின் வருகை பேராசிரியர் டாக்டர் கே. கருணாகரன் “தாய்மொழியின் முக்கியத்துவம்” குறித்து உரையாற்றுவார்.

மேலும், இக்ராம் அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜைட் கமாருடின், தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, லிம் லியன் கியோக் மையத்தின் தலைவர் டாக்டர் தோ கின் வூன், ஜோஆஸ் பிரதிநிதி ராமன் பாதுயின் (சுக்கு கவும் செமாய்) மற்றும் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சி.எம். திரவியம் ஆகியோரும் உரையாற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த விபரங்கள்:

இடம் : Dewan Kuliah Angsana, Faculty of Langugage and Linguistics, Perisiaran Bernas, University of Malaya.

நாள் : பெப்ரவரி 21, 2013 (வியாழக்கிழமை)

நேரம் : மாலை மணி 6.00 லிருந்து இரவு மணி 8.30 வரையில்.

இந்நிகழச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.