அன்வார்: கிட் சியாங், ஹாடி இருவரும் துணைப் பிரதமராகலாம்

1anvஅடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வெற்றி பெற்றால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் துணைப் பிரதமர்களாக நியமிக்கப்படலாம் என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.

மலேசியச் சட்டம் இரண்டு துணைப் பிரதமர் இருப்பதைத் தடுக்கவில்லை என்று கூறிய அன்வார் என்றாலும், பக்காத்தான் மக்களின் அவாக்களை மதித்து ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ளும் என்றார்.  சின் சியு டெய்லிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

ஆனால், பக்காத்தான் துணைப் பிரதமர் பதவி பற்றி விரிவாக விவாதிக்கவில்லை. ஏனென்றால் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கே மிகுந்த கவனம் செலுத்துகிறது.

தேர்தலுக்குப் பிறகு ஹுடூட் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பாஸ் அம்னோவுடன் ஒத்துழைக்காது என்றும் அவர் சொன்னார்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அது ஹுடூட் சட்டத்தைக் கொண்டுவராது என்றவர் உத்தரவாதம் அளித்தார். எந்தக் கொள்கையானாலும் அது அரசமைப்புக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும், அத்துடன் மூன்று கட்சிகளின் இணக்கத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

பக்காத்தான் கூட்டணி பாகாங், ஜோகூர், சாபா, சரவாக் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் ஊடுருவி இருப்பதால் தேர்தலில் குறுகிய பெரும்பான்மையில் அது பிஎன்னை வெற்றிகொள்ளும் என்றும் அந்த பெர்மாத்தாங் பாவ் எம்பி நம்பிக்கை தெரிவித்தார். .