தீபாவளிக்கு முதல் நாளும் நாடாளுமன்றம் கூடுவது மீது அதிருப்தி

தீபாவளிக்கு முதல் நாளன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதனால் அக்டோபர் 26ம் நாள் ‘திறந்த இல்ல உபசரிப்பை’ நடத்துவதற்கான தங்களது ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாள் நடத்தப்படும் முன்னோர் வழிபாடுகளும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

அந்த விஷயம், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தீர்க்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளற்கு மாறாக அமைந்துள்ளது. ஆகவே பிரதமருடைய கூற்று உண்மையானது தானா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பெரும்பாலும் பள்ளிக்கூடத் தேர்வுகள் தீபாவளியை ஒட்டியே வைக்கப்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் தமது வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பினால் நாடாளுமன்றக் கூட்டங்களையும் அரசாங்க நிகழ்வுகளையும் மாற்ற வேண்டும் என்றும் டிஏபி எம்பி-க்கள் கேட்டுக் கொண்டனர்.