உலக அளவில் மலேசியாவின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட எப்பிசிக்கு 20 மில்லியன் இரோ

அரசாங்கம், 2007 தொடங்கி மூன்றாண்டுக்காலத்துக்கு ஊடக ஆலோசனை நிறுவனமான எப்பிசி மீடியாவுக்கு 19.6மில்லியன் இரோ வழங்கியது.

அது “தொடர்புத்துறையில் ஆலோசனைக்காகவும் சேவைகளுக்காகவும் அறிவுரைகளுக்காகவும்” கொடுக்கப்பட்ட கட்டணம் என்று பிகேஆர் பத்து தொகுதி எம்பி தியான் சுவாவுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த மறுமொழ்யில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டிருந்தார்.

“அந்நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஆண்டு ஒப்பந்தம் இருமுறை புதுப்பிக்கப்பட்டு 2010-இல் முடிவுக்கு வந்தது. அந்த மூன்றாண்டு ஒப்பந்தத்துக்குக் கொடுக்கப்பட்டது 19.6மில்லியன் இரோ”, என்று நஜிப் கூறினார்.

பிரிட்டிஷ் ஒளிபரப்புக் கழகத்தின் ஒளிபரப்பில் இடம்பெறுவதற்கான நிகழ்ச்சிகளையும் செய்தித்துணுக்குகளையும் தயாரித்துக் கொடுக்குமாறு அந்நிறுவனத்திடம் கூறப்பட்டிருந்ததா? அப்படிக் கூறப்பட்டிருந்தால் ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்றும் பிரதமரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

“பன்னாட்டு ஊடகங்களில் மலேசியாவைப் பற்றிய நிகழ்ச்சிகள் இடம்பெற வைப்பது பன்னாட்டு  அளவில்  மலேசியாவின் தோற்றத்தை உயர்த்திக்காண்பிக்கும் நமது முயற்சிகளில் ஒன்றாகும்”, என்று நஜிப் தெரிவித்தார். .