வாக்காளர் பட்டியலில் 28,000க்கும் மேற்பட்ட ‘அந்நிய’ வாக்காளர்கள்

தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்நிய வம்சாவளியைச் சேர்ந்த குறைந்தது 28,593 வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் மிக நெருக்கமான போட்டி நிகழும் சிலாங்கூர், சபா மாநிலங்களில் உள்ளனர்.

அந்தத் தகவலை மெராப் எனப்படும் மலேசியத் தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் 2012 நான்காவது கால் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆவர்.

அவர்கள் தங்களை வங்காள தேச, பிலிப்பினோ, இந்தோனிசிய, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர். அந்த நாடுகள் அனைத்தும் மலேசியாவுக்கு குடியேற்றத் தொழிலாளர்களை வழங்குகின்றன.

அந்த எண்ணிகையில் சபாவில் 55.6 விழுக்காட்டினரும் சிலாங்கூரில் 15.1 விழுக்காட்டினரும் அந்த ‘அந்நிய’ வாக்காளர்கள் ஆவர்.

மற்ற மாநிலங்களில் அவர்கள் எண்ணிக்கை கோலாலம்பூரில் 6.2 விழுக்காடு முதல் புத்ராஜெயாவில் 0.1 விழுக்காடு வரையில் உள்ளன.

சபாவின் அண்டை மாநிலமான சரவாக்கில் அந்த எண்ணிக்கை மொத்த வாக்காளர்களில் 1.1 விழுக்காடு ஆகும்.

“அவர்களுடைய மை கார்டு எண்களை நீங்கள் பார்த்தால் அவர்களில் பெரும்பாலோருக்கு (80 விழுக்காடு) மலேசிய ‘மாநில குறியீட்டு எண்’ கொடுக்கப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. ஏனெனில் அந்த ஆவணத்தின் படி அவர்கள் மலேசியாவில் பிறந்ததாக அர்த்தம்,” என மெராப் உதவி ஆய்வாளர் லீ வீ தாக் கூறினார்.

“அவர்களில் பெரும்பாலோர் சபா மாநில குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளனர். அந்த வங்காள தேசிகளும் பாகிஸ்தானியர்களும் இந்தோனிசியர்களும் பிலிப்பினோக்களும் சபாவில் பிறந்ததாக பொருள்படும்.”

“ஆகவே எத்தனை பிலிப்பினோக்கள் உண்மையில் எலிசபத் அரசியார் மருத்துவமனையில் (கோத்தா கினாபாலுவில் முக்கிய மருத்துவமனை)  பிறந்தார்கள் ?”