வெற்றிலைபாக்கு கதையைச் சொல்லி இந்தியரைக் கவரப் பார்க்கிறார் சுல் நூர்டின்

1 zulபொதுத் தேர்தல் கண்ணோட்டம்: 2010-இல் மாற்றரசுக்கட்சியிலிருந்து விலகிய சுல்கிப்ளி நூர்டின், பிஎன் தம்மை ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக்கியதை நினைக்கும்போது மீண்டும் பிறப்பெடுத்ததைப்போல் இருக்கிறது என்றார்.

“இது எனக்கு ஒரு மறுபிறவி”, என நேற்று மஇகா உறுப்பினர்களடங்கிய ஒரு சிறு கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார். மறுபிறவி என்பதைத் தமிழிலேயே குறிப்பிட்டார்.

இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசுவதைக் காண்பிக்கும் வீடியோ படங்களினால் பெயர்நாறிப் போய்க்கிடக்கும் சுல்கிப்ளி (அவை 10 ஆண்டுகள் முந்தி பேசியவை என்கிறார்) இப்போது தமிழில் சில சொல்களைக் கற்று வைத்துக்கொண்டு ஷா ஆலமின் 100,076 வாக்காளர்களில் 14 விழுக்காடாகவுள்ள இந்தியர்களின் வாக்குகளைக் கவர முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய அந்தக் காணொளிகள் பற்றி விவாதிக்க அவர் வெட்கப்படுவதில்லை. பாஸ் கட்சியில் இருந்தபோது அப்படிப் பேசியதாகக் கூறும் அவர், அது பாஸ் மற்றும் பக்காத்தானின் “வெறுப்பூட்டும் சித்தாந்தத்தை”க் காண்பிக்கிறது எனவும் அதன் இனப் பாகுபாட்டுக்கு அது ஒரு “சான்று” எனவும்  பழிபோடுகிறார்.

“மலாய்க்காரர்கள் சீனர்களையும் இந்தியர்களையும் வெறுக்கவும் பதிலுக்கு இவர்கள் அவர்களை வெறுக்கவும்தான் கற்றுத் தருகிறார்கள்.

“மலாய்க்காரர்களையும்கூட ஒருவரை மற்றவருடன் மோத விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தங்களுடன் இல்லாத எல்லோருமே எதிரிகள்தான்”, என ஷா ஆலமில் 300 மஇகா உறுப்பினர்களிடம் பேசியபோது சுல்கிப்ளி நூர்டின் கூறினார்.

தம் பேச்சில்‘அப்பா’ ‘அம்மா’ என்னும் சொல்களைச் சர்வசாதாரணமாக புழங்க விட்டார். மலேசியாவின் தேசிய  உருவாக்கத்துக்கு இந்தியர் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்டு அதற்கு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு  உவமையையும் எடுத்துக் கூறினார்.

“மலேசியாவில் மலாய்க்காரர்கள் வெற்றிலை, சீனர்கள் பாக்கு, இந்தியர்கள் சுண்ணாம்பு.

“சுண்னாம்பு (தமிழிலேயே சொன்னார்) கொஞ்சம்தான்  தடவுவோம்.  ஆனாலும்  வெற்றிலை போடுவதற்கு அது மிக முக்கியம்”, என்றார்.

ஷா ஆலத்தில் ஒழுங்கீனத்துக்கு  முடிவுகட்டுவார்

1 zul3காணொளியில் சுல்கிப்ளி இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசியதால் எழுந்த சலசலப்பு அடங்கக்கூட இல்லை என்ற நிலையில், பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அவரை சிலாங்கூர் தலைநகரின் வேட்பாளராக அறிவித்தது பெரும் வியப்பை அளித்தது.

அவர், தீவிரவாதி, மலாய் மேலாதிக்கத்துக்கு போராடும் பெர்காசாவில் அனல் கக்கும் பேச்சாளர் என்றெல்லாம் பேர் பெற்றிருந்த போதிலும் அவரது தேர்தல் பரப்புரைகளில் தீவிரவாதத்தைக் காண முடியவில்லை, இதமாகவும் பதமாகவும்தான் பேசினார்.

பரப்புரைகளுக்குத் தனியாகச் செல்வதில்லை. ஷா ஆலம் தொகுதிக்குள் அடங்கிய கோட்டா அங்கெரிக் பத்து தீகா ஆகியவற்றுக்கான சட்டமன்ற வேட்பாளர்களான முகம்மட் யூசுப் டின், அஹ்மட் நவாவி ஸின் ஆகியோருடன் சேர்ந்தே செல்கிறார்.

மலாய்க்கார்கள், சீனர்கள், இந்தியர்கள் அடங்கிய சிறுசிறு கூட்டத்தைச் சந்தித்துப் பேசுவதே அவர்கள் வகுத்துக்கொண்டுள்ள வியூகம்.

நடப்பு எம்பியான பாஸ் கட்சியைச் சேர்ந்த காலிட் சமட்டைத் தோற்கடிக்க முடியுமா என்று வினவியதற்கு முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

“செராமாக்களின்போது மக்களுக்கு என்மீது அதிருப்தி என்றால் நேருக்கு நேராக சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிறகு அவர்களுக்கு விளக்கமளிப்போம்.

“இங்குள்ள மக்கள் விசயம் அறிந்தவர்கள். அறிவாளிகள். அவர்களின் அறிவாற்றலை நாம் குறைத்து மதிப்பிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். யார் சொல்வது பொய் என்பதை அவர்கள் அறிவார்கள்”.

வெற்றி பெற்றால் என்ன செய்வார் என்று வினவியதற்கு, அந்நகரின் “ஒழுக்கப் பண்புகளை” திரும்பக் கொண்டுவரப் போவதாகக் கூறினார்.

“ஷா ஆலம் ஒழுக்கம்கெட்ட செயல்கள் அற்ற ஓர் இடமாகத்தான் இருந்தது. எதிர்தரப்பு ஆட்சிக்கு வந்ததும் எல்லா வகை நடவடிக்கைகளும் பெருகி விட்டன.

“அந்த ஒழுக்கப் பண்புகளை மீட்டெடுப்பேன்”, என்றார். அங்குள்ள வாக்காளர்கள் பெரும்பாலும் நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் என்பதால் பெரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்றார்.

மஇகாவில் சலசலப்பு

யார் என்ன சொன்னாலும் சுல்கிப்ளி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டது ஷா ஆலம் மஇகாவில் ஒரு சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதை மறுக்கவியலாது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷா ஆலம் மஇகா உதவித் தலைவர் சி.சுப்பையாவும் 104 உறுப்பினர்களும் கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகினர். மாற்றரசுக் கட்சியை ஆதரிக்குமாறு தம் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொள்ளப்போவதாக  சுப்பையா தெரிவித்தார்.

“ஷா ஆலமைப் பொறுத்தவரை, சுல்கிப்ளிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றுதான் எல்லோரையும் கேட்டுக்கொள்ளப் போகிறேன்”, என்று நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.

1 zul muruசுல்கிப்ளி மீதான எதிர்ப்புணர்வை இந்தியர்கள் வெளிப்படையாகக் காண்பிக்கவில்லை என்றாலும் அது அவர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது என்றாரவர்.

ஷா ஆலமில் பெர்காசா உதவித் தலைவர் மீதான இந்த எதிர்ப்பும் வெறுப்பும் பக்கத்தில் மஇகாவின் எஸ். முருகேசன் போட்டியிடும் கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதிக்கும் பரவுமானால் அது பிஎன்னுக்கு ஆபத்தாக முடியும். ஏனென்றால் அங்குள்ள வாக்காளர்களில் 29 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

கோட்டா ராஜா மஇகா தேர்தல் பணியாளர்கள், சுல்கிப்ளியின் நியமனம்தான் தங்களுக்கு பெரும் தலையிடியாக உள்ளது என்கிறார்கள். அவர் மஇகா நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறார்கள். கலந்துகொண்டால் அது மேலும் சிக்கலை உண்டுபண்ணும்.

ஆனால், ஷா ஆலம் மஇகா தலைவர் கே.எஸ். சுப்பையா வேறு மாதிரியாக நினைக்கிறார். சுல்கிப்ளி நஜிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய சமூகத்தை அவர் வேண்டிக்கொண்டார்.

“நாம்(இந்தியர்கள்) விரும்புவதையெல்லாம் கொடுக்கும் பிரதமர் இதற்குமுன் இருந்ததில்லை.

“அன்றுகூட அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆலயத்துக்கு நிதி வேண்டும், பள்ளிக்கூடத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று நான் கேட்டதை 20 நிமிடங்களில் அங்கீகரித்தார்”, என்று நேற்று அதே செராமாவில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.

“இப்படிப்பட்டவர் இந்து சமயத்தை இழிவுபடுத்துவாரா? அத்துடன், மன்னிப்பது மனிதப் பண்பு. மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்கூட ஆலயங்களை இழுத்து மூடுவேன் என்று ஒருகாலத்தில் மிரட்டி இருக்கிறாரே.

“அவரை மன்னித்தோம். அதேபோல் சுல்கிப்ளியையும் மன்னிப்போம்”, என்றவர் வெறுப்புணர்வுடன் வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்று தம் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

சுல்கிப்ளியும் மீண்டும் கூட்டத்தினர் முன்வந்து “மன்னிப்போம், மறப்போம்” எனத் தமிழில் தம் கைவரிசையைக் காண்பித்து கூட்டத்தைக் கவரப் பார்த்தார்.