அன்வார்: பெருத்த மோசடியால் பக்காத்தான் வெற்றி பாதிக்கப்படலாம்

1 fraudமாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், “பெருத்த மோசடியால்” பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டின் வெற்றி பாதிப்படையலாம் என அஞ்சுகிறார்.

ஆஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமான ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு (ஏபிசி) அளித்த நேர்காணலில், மே 5 தேர்தலில் எளிய பெரும்பான்மையில் வெற்றிபெறும் நம்பிக்கை உண்டு என்று கூறிய அன்வார், தேர்தல் மோசடி அதற்குப் பெரும் தடையாக அமையலாம் என்றார்.

“அஞ்சல் வாக்காளர்கள் என்றால் போலீசில் அல்லது ஆயுதப்படைகளில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். ஆனால், மே மாத வாக்காளர் பட்டியலை ஆராய்ந்தபோது அதில் வங்காள தேசிகள், பாகிஸ்தானியர்கள், இந்தோனேசியர்கள் ஆகியோர் அஞ்சல் வாக்காளர்களாக இருப்பதைக் கண்டோம்.

“இது அப்பட்டமான மோசடி, அல்லவா”, என்றவர் நேற்று ஒளிபரபரப்பான அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

1fraud 1சிலாங்கூரில் வாக்களிப்பதற்காக சாபாவிலிருந்து ஆவி வாக்காளர்கள் கொண்டுவரப்படுவதாக செவ்வாய்க்கிழமை பிகேஆர் சுமத்திய குற்றச்சாட்டை அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.

“28,000-க்கு மேற்பட்ட பிலிப்பினோக்கள் அல்லது இந்தோனேசியர்கள் சாபாவில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சிலாங்கூரில் வாக்களிப்பர்.

“இதற்கு தேர்தல் ஆணையமும் திருப்தியான விளக்கம் அளிக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இரண்டு, மூன்று விழுக்காட்டுப் பெயர்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் அதனால் தேர்தல் முடிவை மாற்ற முடியாது. ஏனென்றால், சீரமைப்புக்கான அறைகூவல் மேலோங்கியுள்ளது. இளம் வாக்காளரிடையே எழுச்சியும் வலுவாக உள்ளது”, என்றாரவர்.

ஆஸ்திரேலியா ஒதுங்கி நிற்பதற்கு கண்டனம்

ஏபிசி செய்தியாளர் ஸோ டேனியலிடம் பேசிய அன்வார், தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

“கிராமப்புறங்களில், குறிப்பாக, 2008-இல் நாங்கள் தோல்விகண்ட இடங்களான ஜோகூர், சாபா, சரவாக் ஆகியவற்றில் ஊடுருவுவதில் வெற்றி பெற்றிருக்கிறோம்”, என்றாரவர்.

ஆஸ்திரேலியா தேர்தல் பார்வையாளர்களை அனுப்பாதது பற்றிக் கேட்டதற்கு அது. ஜனநாயக நடைமுறைகளை ஆதரிக்கும் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணானது என்றார்.

“எந்தக் கட்சியையும் ஆதரிக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்கவில்லை. சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் ஆஸ்திரேய வெளியுறவுக் கொள்கைக்கு இசைவாக நடந்துகொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

“ஈராக் என்றால் சத்தம் (ஆஸ்திரேலியர்கள்) போடுகிறீர்கள். ஆப்கானிஸ்தான், மியான்மார் என்றால்  சத்தம் போடுகிறீர்கள். மலேசியா என்று வரும்போது மெளனமாகி விடுவது ஏன்? வர்த்தம் பாதிக்கப்படும், முதலீடு பாதிக்கப்படும் என்பதாலா?”, என்றவர் வினவினார்.

நஜிப் அரசுடன் இருதரப்பு உறவுகளை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆஸ்திரேலியா “மலேசியா நியாயமான, சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதைக் கவனிக்காமலிருப்பது” சரியல்ல என்றும் அன்வார் குறிப்பிட்டார்.