‘உத்துசான் தலைப்புச் செய்திக்கு நஜிப்பே பொறுப்பு’

அம்னோ தலைவர் என்ற முறையில் நஜிப் அப்துல் ரசாக்தான், அக்கட்சிக்குச் சொந்தமான நாளேடு உத்துசான் மலேசியாவின் முதல்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடப்பட்டிருந்த ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்புச் செய்திக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அன்வார் இப்ராகிம்.

“அவர்கள் நஜிப் சொல்வதைக் கேட்பவர்கள். முதலாவதாக, அது ஒரு அம்னோ செய்திதாள்.

1 anvar“இரண்டாவதாக, எனக்கு இது எப்படி தெரியும் என்றால், நான் அம்னோ துணைத் தலைவராக இருந்தபோது அம்னோ தலைவர் ஒவ்வொரு நாளும் உத்துசானுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பணிப்பார்”. இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அன்வார் பேசினார்.

மீண்டும் பிரதமராக பதவியேற்ற நஜிப், இவ்வாண்டு தேர்தலில் பிஎன்னின் மோசமான அடைவுநிலைக்கு “சீனர் சுனாமி” மீது பழி போடுவது, வேறுபாடு களைந்து இணக்கம் காண்போம் என்று அவர் அறைகூவல் விடுத்ததற்கு முரணாக உள்ளது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் கூறினார்.

அம்னோ தலைவர்கள் தொடர்ந்து உத்துசானுக்கு “ஆசி கூறுவதும் ஆதரிப்பதும்” துரதிஷ்டவசமானது என்று அன்வார் கூறினார்.

சிவப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துகளில் வெளியாகியிருந்த அச்செய்தித் தலைப்பு பல இனத்தவரையும் ஆத்திரமுறச் செய்தது. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லாவும் கூட அதைக் கண்டித்திருந்தார்.