பினாங்கு மசீசவில் கிளர்ச்சி, கெராக்கான் சேவை மையங்களை மூடுகிறது

mca13வது பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்டதை அடுத்து பினாங்கு மசீசவில் கிளர்ச்சி உருவாகியுள்ளது. கெராக்கான் அதன் சேவை மையங்களை மூடி வருகிறது.

பாயான் பாருவில் நிறைய சேவையாற்றி வந்துள்ளபோதிலும் வேட்பாளராக நியமிக்கப்படாத அத்தொகுதி மசீச தலைவர் டேவிட் லிம்,  இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார். அதில் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் பதவி விலக வேண்டும் என்றவர் கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.

சுவா, நியாயமான காரணமின்றி மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் இரண்டு சட்டமன்ற இடங்களையும் விட்டுக்கொடுத்தது கட்சியின் ஊக்கத்தைப் பாதித்து விட்டதாக ஏற்கனவே தொகுதித் தலைவர்கள் டான் சோங் செங் (கோலா சிலாங்கூர்), லீ வெய் கியாட்( சுபாங்), லியு யுவான் கியோங் ஆகியோர் குறைகூறியுள்ளனர். அவர்களுடன் இப்போது டேவிட்டும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.

mca chuaசுவா (இடம்), தமக்கு வேண்டியவர்களை மட்டுமே வேட்பாளராக்கினார் என்றும் தமக்கு ஒத்துவராதவர்களை ஒதுக்கி விட்டார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

சுவாவின் தேர்தல் பரப்புரை வீயூகங்கள் தவறானவை என்றும் அவர்கள் கூறினர். அதன் விளைவாக வாக்குகள் கேட்டுசென்ற மசீச தேர்தல் பணியாளர்கள் சீனர் சமூகத்தின் கேலிக்கும் ஏளனத்துக்கும் ஆளானார்கள்.

பினாங்கில் மோசமான தோல்வியைக் கண்டது மசீச மட்டுமல்ல.

mca tengகெராக்கானும் மஇகாவும் கூட அங்கு தலைதூக்க முடியவில்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு அரசை அமைக்க போதுமான இடங்களைப் பக்காத்தான் பெற்றுவிட்டது தெளிவாக தெரிந்ததும் கெராக்கானின் டெங் சாங் இயோ(வலம்) பினாங்கு பிஎன் தலைவர் பதவியிலிருந்தும் கெராக்கான் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக  அறிவித்தார்.

“இதற்காக வருத்தப்படவில்லை. பினாங்கு மக்கள் என் தலைமையை ஏற்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த குறுஞ் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

டெங்,  முன்னாள் பிஎன் ஒருங்கிணைப்பாளர் ஏ.மோகன், ஒரு புதியவரான பிகேரின் ஒங் சின் வென் ஆகியோரை எதிர்த்து புக்கிட் தெங்காவில் போட்டியிட்டார். அதில் புதியவரான ஒங் 5,190 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

மாநில கெராக்கான் செயலாளர் கோ கெங் ஸ்னியா, பத்து உபானில் பிகேஆரின் டி.ஜெயபாலனிடம் தோல்வி கண்டதும் மறுநாளே பதவி விலகினார்.

பிஎன் தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை கெராக்கானே பினாங்கில் கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிகிறது.  பிஎன் தோழமைக் கட்சிகளின் அம்முடிவை அறிவிக்க நேற்று செய்தியாளர் கூட்டமொன்று நடப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்துச் செய்யப்பட்டது.

“கெராக்கான் பினாங்கில் உள்ள அதன் சேவை மையங்களை மூடும். அவற்றை நடத்த வசதி இல்லை”, என்று மாநில பிஎன் இளைஞர் தகவல் தலைவர் இங் கூன் லெங் அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.

பிஎன்னின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான இம், பாயான் பாருவில் 17-ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த தம் நலவளர்ச்சி  மையத்தை மூடுவது பற்றி ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போதைக்கு என்னிடம் உதவும் வசதி இல்லை. உங்களுக்கு உதவி தேவையென்றால் நீங்கள் புதிதாக தேர்ந்தெடுத்த பிரதிநிதியை அணுகுங்கள்”, என்றவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த தோல்வியால் துவண்டு போயிருக்கும் இன்னொரு கட்சி பார்டி சிந்தா மலேசியா (பிசிஎம்). அது பிஎன்னையும் பக்காத்தானையும் எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வைப்புத்தொகையை இழந்தது.

mca cintaபிசிஎம் உதவித் தலைவர் ஹுவான் சாங் குவான் (இடம்) இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுகிறார். அதில் பிறையில் உள்ள தம் சேவை மையத்தை மூடப்போவது பற்றி அறிவிப்பார் எனத் தெரிகிறது.

“இந்தத் தேர்தலில் சீனர்கள் நன்றாகக் காலை வாரி விட்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் சங்கங்களுக்கும் மற்றவற்றுக்கும் உதவி தேவை என்கிறபோது என்னிடம் வந்தார்கள். ஆனால், வாக்களிக்கும்போது டிஏபி-க்கு வாக்களித்தார்கள்.

“நல்லா பாடம் கற்றுக்கொண்டேன். என் சேவை மையங்களை மூடப்போகிறேன். ஜாலியாக இருக்கப் போகிறேன்.  Lu orang mati lu punya pasai. Jangan cari saya lagi. (சாகிறீர்களா, அது உங்களைப் பொறுத்தது. மீண்டும் என்னைத் தேடி வராதீர்கள்)”, என்று முகநூலில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து கவானில் போட்டியிட்ட ஹுவான் நான்கு-முனை போட்டியில் பிகேரின் கஸ்தூரி ராணி பட்டுவிடம் படுதோல்வி கண்டார்.

TAGS: