விற்பனையாளர்கள் மருட்டப்படுவதால் ஹாராக்கா விற்பனை சரிந்துள்ளது

harakahவாரம் இரு முறை வெளியாகும் பாஸ் கட்சியின் ஹாராக்கா சஞ்சிகையை உள்துறை அமைச்சு  கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் விற்பனை 17,000 பிரதிகளாகச் சரிந்துள்ளது.

அந்தத் தகவலை ஹாராக்கா தலைமை ஆசிரியர் லுப்தி ஒஸ்மான் வெளியிட்டார்.

ஹாராக்கா விற்பனை கடந்த வாரத்திலிருந்து குறைகிறது என்றும் அந்த சஞ்சிகையை விற்பதின் மூலம்  ஆபத்தை எதிர்கொள்ள விற்பனையாளர்கள் தயாராக இல்லை என்பதால் விற்பனை கூடவில்லை  என்றும் அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.

“ஹாராக்கா பிரதிகளை மட்டும் கைப்பற்றுவதோடு நிற்காமல் உள்துறை அமைச்சு அதிகாரிகள் அடுத்த
முறை விற்பனை மய்யத்தில் ஹாராக்கா இருப்பதைக் கண்டால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்
என்றும் விற்பனையாளர்களை மருட்டியுள்ளனர்.”harakah1

“சில விற்பனையாளர்கள் 10 பிரதிகளை மட்டுமே விற்கின்றனர். அவர்களுக்கு ஒரு பிரதிக்கு 20 சென்  மட்டுமே கிடைக்கின்றது. அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் 4,000 முதல் 5,000 ரிங்கிட்  வரையில் அபராதம் விதிக்கப்படலாம். அந்த அபாயத்தை எதிர்கொள்ள விற்பனையாளர்கள் தயாராக  இல்லை,” என்றார் லுப்தி ஒஸ்மான்.

“நெகிரி செம்பிலான், கெடா ஆகியவற்றில் விற்பனையாளர்களிடமிருந்து ஹாராக்கா பிரதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில இடங்களில் அந்தச் சஞ்சிகை விற்பனையாளர்களிடம் கொடுக்கப்படுவதற்கு  முன்பே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”

“விற்பனையாளர்கள் மருட்டலுக்கு இலக்காகும் போது பிரச்னை ஏற்படுகின்றது. அது தான்
அவர்களுடைய (அரசாங்கத்தின்) நோக்கமாகும்,” எனக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகளுடைய
மருட்டலுக்கு அஞ்சி விற்பனையாளர்கள் ஹாராக்கா கைப்பற்றப்பட்டது மீது போலீசில் புகார்
செய்யவும் தயங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.