பிஎஸ்எம் கணிப்பு தவறானது, மலேசியர்கள் கட்சிக்கு வாக்களித்தனர் வேட்பாளர்களுக்கு அல்ல

selvanபிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி, மே 5 பொதுத் தேர்தலில் தான்  போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

காரணம் அது மலேசியர்கள் கட்சி சார்பு நிலைக்குப் பதில் வேட்பாளர்களுக்கு  வாக்களிப்பர் என எண்ணியதாகும்.

“தனிநபர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால்  மும்முனைப் போட்டி என வரும் போது போட்டியில் உள்ள பெரிய கட்சியை  வாக்காளர்கள் தேர்வு செய்தனர்,” என பிஎஸ்எம் கட்சியின் எஸ் அருட்செல்வன்  கூறினார்.

எதிர்த்தரப்புக் கூட்டணி தேர்தலில் நல்ல அடைவு நிலையைப் பெற்றால் அடுத்த  கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்ததால்  சிலாங்கூரில் செமினி, கோத்தா டமன்சாரா ஆகியவற்றிலும் பேராக்கில்  ஜெலாபாங்-கிலும் அவர்கள் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சி  வேட்பாளர்களை தேர்வு செய்தனர் என அவர் சொன்னார்.

அம்னோ செமினியிலும் கோத்தா டமன்சாராவிலும் வெற்றி பெற்றது. கோத்தா  டமன்சாராவில் பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் தமது இடத்தைத் தக்க வைத்துக்  கொள்ளத் தவறி விட்டார். காரணம் எதிர்த்தரப்பு வாக்குகள் பக்காத்தானுக்கும்  பிஎஸ்எம் -முக்கும் இடையில் பிளவுபட்டதாகும். ஜெலாபாங்-கில் டிஏபி வாகை
சூடியது.

பிஎஸ்எம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும்  பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டது. மற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும்  அது தனது சொந்த சின்னத்தில் களமிறங்கியது.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட  டாக்டர் மைக்கல் ஜெயகுமாரைத் தவிர மற்ற மூன்று இடங்களிலும் பிஎஸ்எம்  தோல்வி கண்டது.

 

 

TAGS: