பாஸ்: “மை கார்டு மோசடி” குறித்த போலீஸ் விளக்கம் நம்ப முடியவில்லை

“பாங்கி ஒய்வுத் தலத்தில் அந்நியர்கள் தொழில் முனைவர் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாக போலீஸ் அளித்துள்ள விளக்கம் நம்ப முடியாததாக இருக்கிறது. அத்துடன் அந்த விளக்கம் மேலும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.”

“போலீசாருக்கும் எதுவும் தெரியாமல் இருக்க வழி இல்லை. மக்கள் கேள்வி எழுப்புவர். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மட்டும் எண்ண வேண்டாம்”, என பாஸ் இளைஞர் அமைப்பின் ஜனநாயக மறுவாழ்வு, உறுப்பினர் திரட்டுப் பிரிவுத் தலைவர் முகமட் அட்ராம் மூசா கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஈடாக குடியுரிமை வழங்கப்படுவதற்காக கும்பல் ஒன்று  240 அந்நியர்களை அந்த ஒய்வுத் தலத்துக்குக் கொண்டு வந்தது பாஸ் கட்சி கூறியிருப்பதை சிப்பாங் ஒசிபிடி இம்ரான் அப்துல் ரஹ்மான் நிராகரித்துள்ளது பற்றி அட்ராம் கருத்துரைத்தார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, தொழில் முனைவர் பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தேசா பிங்கிரான் புத்ராவிற்கு அனைத்து அந்நியர்களும் சென்றிருந்தனர்,” என இம்ரான் சொன்னதாக இன்றைய சினார் ஹரியான் செய்தி குறிப்பிட்டது.

என்றாலும் அந்த விஷயம் குறித்து புலனாய்வு செய்ய நடவடிக்கை எடுத்த போலீசாரை அம்ரான் பாராட்டினார்.

“போலீஸ் விசாரணைக்காக நான் போலீசாருக்கு நன்றி கூற விரும்புகிறேன். அத்துடன் அன்றைய தினம் அங்கு இருந்த அனைவரும் அந்நியர்கள் என்பதை உறுதி செய்ததற்காக அவர்களுக்கு மீண்டும் நன்றி”, என்றார் அம்ரான்.