நேற்று காலை பெட்டாலிங் ஜெயா, பண்டார் சுன்வேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பலத்த காயங்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காலை 11 மணியளவில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா துணை போலீஸ் கமிஷனர் எம் ஹுசின் சோல்லேஹுடின் ஜோல்கிப்லி தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு அப்பெண் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.
முதன்முறை சோதனையில், அப்பெண்ணின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 20 வயதுகளில் உள்ள அந்தப் பெண், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் படித்து வந்தவர் ஆவார்.
விசாரணைக்கு உதவுவதற்காக 20 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார், என்று செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
விசாரணைக்கு உதவும் வகையில் தடயவியல் குழுவினர் பல பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஹுசின் கூறினார்.
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், புலனாய்வு அதிகாரி சூரியாந்தி லதேராவை 013-335-2547 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.
-fmt























