சௌதி அரேபியா மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன-அம்னெஸ்டி

saudiசௌதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாக , மனித உரிமைகள் அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஐநா மன்றத்துக்கு நான்காண்டுகளுக்கு முன்னர், சீர்திருத்தங்களை அமல்படுத்துவதாகக் கொடுத்த உறுதிமொழிகளை சௌதி அரேபியா அமல்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், அடக்குமுறையையும் அதிகரித்திருக்கிறது என்று அம்னெஸ்டி கூறியிருக்கிறது.

அமைதியாகச் செயல்படும் ஆர்வலர்கள் எதேச்சாதிகாரமான வகையில் கைது செய்யப்படுவது, நீதியற்ற விசாரணை மற்று சித்ரவதை ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

சர்வதேச விமர்சனத்தைத் தவிர்க்க தன்னிடம் இருக்கும் பொருளாதார வலுவை சௌதி அரேபியா பயன்படுத்துவதாகவும் அம்னெஸ்டி குற்றம் சாட்டுகிறது.

இன்று ஜெனிவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சௌதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிக்கை வருகிறது. -BBC