சீனாவுக்கு எதிராக கூட்டு சேர்க்கிறது ஜப்பான்

aseanகடல் மற்றும் வான் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஜப்பானுக்கும் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே டோக்யோவில் நடந்த கூட்டத்தின் முடிவில் கோரப்பட்டுள்ளது.

சீனா எல்லைப் பிரச்சனைகளில் கடும்போக்காக நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில் இத்தீர்மானம் வந்துள்ளது.

தென் சீனக் கடலில் தான் உரிமைகோரும் தீவுகளுக்கு மேல் பறக்கும் விமானங்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா சமீபத்தில் அறிவித்தது. இந்த தன்னிச்சையான அறிவிப்பை தாம் மதிக்கப்போவதில்லை என்று அமெரிக்காவும் ஜப்பானும் அறிவித்துவிட்டன.

ஜப்பானுக்கும் ஆசியான் பிராந்திய கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தின் போது, தனது அண்டை நாடுகளாக இருக்கும் இந்த கூட்டமைப்பின் நாடுகளுக்கு, உதவி மற்றும் கடனாக 20 பில்லியன் டாலர்களை அளிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.

வலுவான சீனாவை எதிர்கொள்ள ஆசியான் நாடுகளை ஜப்பான் நாடிச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். -BBC