பாகிஸ்தானில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட காதல் ஜோடி

stone_attack_001பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்துக் கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள லோரலய் கிராமத்தை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் திருமணமான இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அந்த பெண்ணும் திருமணமானவர் என்பதால் இந்த தகாத உறவு பற்றிய தகவல் அறிந்த உள்ளூர் பஞ்சாயத்தார் அந்த கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடிப்பதற்காக வலை விரித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடி, அந்த வலைக்குள் கடந்த வாரம் அந்த ஜோடி சிக்கியது. உள்ளூர் மதத்தலைவரின் உத்தரவுப்படி பிடிபட்ட இருவரையும் ஊர் மக்கள் கல்லால் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காதும் காதும் வைத்தாற்போல் அவசரம் அவசரமாக பிணங்களை புதைத்து விட்டனர்.

எப்படியோ, பெண்ணிய ஆர்வலர்களின் மூலமாக இந்த சம்பவம் பற்றிய தகவல் பலூசிஸ்தான் உள்துறை மந்திரியின் கவனத்துக்கு சென்றடைந்தது. இதனையடுத்து, உள்ளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதைக்கப்பட்டவர்களின் பிணங்களை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதன செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரர், ஆணின் தந்தை, மாமா, தீர்ப்பு வழங்கிய மதத்தலைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி, அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கவுரவம் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இது போல் கல்லால் அடித்து கொல்லப்படுவதாக பெண்கள் உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.