புருனேயில் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வருகிறது

புருனேய் சுல்தான்

 

புருனேயில் கடுமையான இஸ்லாமியத் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நாட்டின் சுல்தான் அறிவித்துள்ளார்.

கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற இறுதியான தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் நாளை-வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்துள்ளார்.

புருனேயில் ஷரியா சட்டம் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதன் சுல்தான் தெரிவித்துள்ளார்.

புதிய தண்டனைச் சட்டத்தின்படி கண்ணியமற்ற வகையில் நடந்து கொள்வது, வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொள்ளாதது ஆகிய குற்றங்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக கசையடி, திருட்டுச் செயல்களுக்கான தண்டனையாக கைகளை வெட்டுதல் ஆகியவை நடைமுறைக்கு வரும்.

இதையடுத்து இறுதியாக குதவழி உறவு, திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக் கொள்வது போன்ற குற்றங்களுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனைகளை நிறைவேற்ற, சுல்தான் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய சட்டம் வழி செய்கிறது.

வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் கலந்து கொள்ளாவிட்டால் தண்டனை என்று அறிவிப்பு.

 

ஷரியா சட்டங்கள் அல்லாவால் வகுக்கப்பட்டவை என்றும், அவற்றைக் கொடூரமானது அல்லது நியாயமற்றது என்று கூறுவது சரியல்ல என்றும் உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரான சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியா கூறியுள்ளார்.

ஆனால் இந்த புதிய சட்ட வழிகளின் மூலமான சில தண்டனைகளை, சித்திரவதைக்கு ஒப்பானவை என்றும் அவை கொடூரமானவை மற்றும் மனிதத் தன்மையற்றவை என்றும் ஐ நா வின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. -BBC