தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வெற்றி

தமிழ் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் அனைத்திந்திய அதிமுக எதிர்பார்த்தபடியே வெற்றிபெற்றுள்ளது.

இறுதிமுடிவுகள் சில இடங்களிலேயே அறிவிக்கப்பட்டிருந்தாலுங்கூட மாநிலம் தழுவிய அளவில் பெரும்பான்மையான பகுதிகளில் தனித்தே போட்டியிட்ட அதிமுக முன்னிலையில் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. பத்து மாநகராட்சிகளும் நிச்சயம் அதிமுக வசமாகும் என உறுதியாகத் தெரிகிறது.

மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் 83-ல் அதிமுக முன்னிலையில் இருக்கிறது. 23-ல் திமுக முன்னிலையில் உள்ளது.

தேமுதிக, காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. இரு நகராட்சிகளில் தேமுதிக முன்னிலையில் இருக்கிறது.

மேயர் பதவியைப் பிடிக்கமுடியவில்லை, மிகக் குறைவான அளவிலேயே நகராட்சித் தலைவர் பதவிகளும் என்றாலும் கூட, எங்கெங்கும் திமுகவே இரண்டாம் நிலையில் இருக்கிறது. அந்த அளவில் தானே முக்கிய எதிர்க்கட்சி என்பதை அது நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டு பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் வீற்றிருக்கும் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், அ இஅதிமுக கூட்டணி அமைக்க முன் வராத சூழலில், இடது சாரிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் முடிவுகள் அதற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதையே காட்டுகின்றன.

காங்கிரஸ் படுதோல்வியடைந்திருக்கிறது. ஒரு நகராட்சியில்கூட அதனால் தலைமைப் பதவியைக் கைப்பற்றமுடியவில்லை. ஆனால் பேரூராட்சித் தலைவர்கள் பதவிகள் சிலவற்றை அது வென்றிருக்கிறது.

பாரதீய ஜனதாகூட மேற்குப் பகுதியில் சில பேரூராட்சிகளை வென்றிருக்கிறது. மதிமுக ஓரிரு இடங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபித்திருக்கிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் பகுதிகளில் கூட படுதோல்வியினை சந்தித்திருக்கிறது.

தேமுதிக-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி தவிர மற்றனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. தமிழ்நாட்டில் வெகுகாலத்திற்குப் பிற்கு நடைபெறும் கூட்டணி இல்லாத தேர்தல்கள் இவை எனலாம்.