“ஐஸிஸ் பிரிவினர், பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டையாடுகின்றனர்”

“ஐஸிஸ் தீவிரவாதிகள் பிற பிரிவு முஸ்லிம்களை வேட்டை”

 

இராக்கில் ஐஸிஸ் ஜிஹாதிக் குழுவினால் கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து தப்பியோடிய இராக்கியர்கள், ஐஸிஸ் குழுவினர் , சுன்னி பிரிவைச் சாராத முஸ்லிம்களையும், பிற எதிரிகளையும், திட்டமிட்டு வேட்டையாடி வருவதாக , பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றனர்.
மொசுல் நகரின் முன்னாள் பிராந்தியத் தலைவர் ஒருவர், இப்போது குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகர் ஒன்றில் உள்ள அகதிகள் முகாமிலிருந்து பிபிசிக்கு பேசுகையில், ஐஸிஸ் குழு, இப்போது அரசாங்கத்துக்கோ அல்லது பாதுகாப்புப் படையினருக்கோ வேலை செய்தவர்களை அடையாளம் காண தகவல்களைத் திரட்டிவருவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் “தவறுகளை” உணர்ந்து திருந்தி, ஐஸிஸ் குழுவுக்கு விசுவாசமாக இருக்கப்போவதாக உறுதி தரவேண்டும் அல்லது மரண தண்டனையை எதிர்நோக்க வேண்டும் என்று கூறப்படுவதாக அவர் கூறினார்.
ஐஸிஸ் அமைப்பினர் மொசுல் நகரில் சுன்னி அல்லாத மக்களை இலக்குவைத்து நகரின் பல்வேறு பகுதிகளில் நகர்ந்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பிரிட்டிஷ் முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை

இதனிடையே, சிரியாவிலும், இராக்கிலும் நடந்து வரும் மோதலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்று பிரிட்டனில் உள்ள 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் இமாம்கள் பிரிட்டிஷ் முஸ்லிம்களைக் கோரியிருக்கிறார்கள்.

மதக்குழுப் பிரிவினைகளுக்கு இரையாக வேண்டாம் என்று முஸ்லிம் மக்களைக் கோருவதற்காக, தாங்கள் ஒரே குரலில் கோருவதாக அவர்கள் திறந்த மடல் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

சிரியாவிலும் இராக்கிலும் நடந்து வரும் மோதலில் பங்கேற்க பல நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் முஸ்லிம்கள் அந்த இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் என்பதாக வரும் செய்திகளை அடுத்து அவர்களது இந்த கடிதம் வருகிறது.
சிரியாவில் நடக்கும் மோதலில் தான் பங்கேற்றுவருவதாகச் சொல்லிக்கொண்ட பிரிட்டிஷ் முஸ்லிம் ஒருவர், பிபிசியிடம் பேசுகையில், பிரிட்டிஷ் அரசியின் அரண்மனையான, பக்கிங்காம் அரண்மனையில், இஸ்லாத்தின் கறுப்புக்கொடி பறக்கும் வரை தான் பிரிட்டன் திரும்பப்போவதில்லை என்று கூறினார்.

தான் சிரியாவில் கடந்த 12 மாதங்களாக இருந்து வருவதாகவும், அங்கு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், குண்டு தயாரிப்பு மற்றும் எதிரிகளை சுட்டு வீழ்த்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
யார் எதிரி என்று கேட்டதற்கு, இஸ்லாமிய அரசை நிறுவுவதைத் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எதிரிகளே என்று அவர் பதிலளித்தார். -BBC