காஸாவில் இஸ்ரேல் தரைப் படை கடும் தாக்குதல்: உலக நாடுகள் கவலை

  • காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலின் ராணுவ ஹெலிகாப்டர்.
    காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலின் ராணுவ ஹெலிகாப்டர்.

காஸா மீது இஸ்ரேல் தரைப்படை கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக மாபெரும் தாக்குதலை வியாழக்கிழமை தொடங்கியது. இதனால், உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.

காஸாவில் இஸ்ரேல் பீரங்கிப்படையும், விமானப்படையும் ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து வியாழக்கிழமை இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்தன.

அதன் வடக்குப்பகுதியில் இருதரப்பினருக்கும் கடும் சண்டை நடைபெற்றதில், இஸ்ரேல் வீரர் ஒருவரும், 5 பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கடந்த 8ஆம் தேதியில் இருந்து இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 2 இஸ்ரேலியர்களும், 260 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். 1,920 பேர் காயமடைந்துள்ளனர். 18,000 பேர் வீடுகளை இழந்து ஐ.நா. அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்’ என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், “இருதரப்பிலும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்தத்தை ஹமாஸ் தீவிரவாதிகள் நிராகரித்ததைத் தொடர்ந்து, எங்கள் முப்படையும் தாக்குலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம், இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதேயாகும். இந்தத் தாக்குதல் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டமைப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, “தேவைக்கு ஏற்ப தரைவழித் தாக்குதல் விரிவுப்படுத்தப்படும். எனவே, காஸா பகுதியில் வசிப்போர் அனைவரும் பத்திரமாக வெளியேறுங்கள்’ என்று மக்களுக்கு இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் மோதி அல்மோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், “தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்’ என்று ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

இரு முறை போர்நிறுத்தம்: முன்னதாக, எகிப்தின் போர்நிறுத்தத் திட்ட முயற்சியை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டு கடந்த 15ஆம் தேதி காலை சில மணி நேரம் போர் நிறுத்தம் செய்தது. ஆனால், ஹமாஸ் அதனை ஏற்க மறுத்ததால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.

பின்னர், மனித நேய உதவிகளுக்காக ஐ.நா. வேண்டுகோளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு 17ஆம் தேதி 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்திருந்தனர்.

பான் கீ மூன் வலியுறுத்தல்: இதனிடையே, ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கூறுகையில், “”காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருவது குறித்து நானும், உலகத்தலைவர்களும் கவலை கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்களும, உலகத் தலைவர்களும் ஒருங்கிணைந்து மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

நெதன்யாகுவுடன் கெர்ரி பேச்சு: இந்த நிலையில், “”அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம், “ராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். 2012ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் இருதரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்புக்கொள்ளும் வகையில் எகிப்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என வலியுறுத்தினார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.