இஸ்ரேல் தாக்குதல்: தீவிரவாதத் தலைவர் பலி

isrel_palastinகாஸாவிலிருந்து இஸ்ரேல் தனது ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று  அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இந்தத் தாக்குதலில் ஜிஹாத் தீவிரவாதக் குழுவின் முக்கிய தலைவரான டேனியல் மன்சூர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,820ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,320ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், இஸ்ரேல் தரப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

7 மணி நேர போர் நிறுத்தம்: முன்னதாக ஐ.நா.பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கொடூர தாக்குதலுக்கு எழுந்த உலக நாடுகளின் கண்டனத்தை அடுத்து, காஸா மீதான தாக்குதலை திங்கள்கிழமை 7 மணி நேரத்துக்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது.

எனினும் இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீறப்பட்டது.

கண்டனம்: ஐ.நா. பள்ளி மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், “இது ஒரு குற்றவியல் நடவடிக்கை. இதற்கு இஸ்ரேல் ராணுவம்  பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற முட்டாள்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.