“யாஸிடி” இன மக்களை கொத்து கொத்தாக கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

yazidi_minority_001ஈராக்கில் உள்ள யாஸிடி என்னும் சிறுபான்மை இன மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த யூன் 9ம் திகதி ஈராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார்.

இதன்பின் கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது ‘ஜிஷியா’ வரி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதால், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது ஈராக்கில் வெறும் 1 லட்சம் பேரை கொண்ட மிக சிறுபான்மையினரான “யாஸிடி” இனத்தவரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொத்து கொத்தாக கொலை செய்து வருகின்றனர்.

ஜொராஷ்டிரிய மதத்தை பின்பற்றும் இவர்கள் ‘பேய்களை வழிபடுபவர்கள்’ எனக் கூறி வேட்டையாடி வருகின்றனர். மேலும் இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், அடிமைகளாக ஆக்கப்பட்டது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள், ஆதரவற்று விடப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க மலைகளில் தஞ்சமடைந்த சில மக்கள் உணவு, நீர் ஏதும் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 40 பேர் குழந்தைகள் ஆவார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் யாஸிடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், இதே நிலை நீடித்தால், சிறிது நாட்களில் எங்களது இனமே அழிந்துவிடும் எனக் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் யின் இச்செயலிற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.