மாபுஸ்: சிருலுடனான டெலியுரையாடல் நடக்குமா, நடக்காதா?

 

sirultelecontomorrowஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாருடனான டெலியுரையாடல் நடைபெறுமா என்பது நாளைக்குத்தான் தெரியும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார்.

ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை முன்னாள் போலீஸ் படை கொமாண்டோவான சிருல் பேட்டி அளிப்பதற்கு அனுமதிக்காது என்று அண்மையச் செய்தி கூறுகிறது என்பதை பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினரான மாபுஸ் சுட்டிக் காட்டினார்.

தாம் சிருலுடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நாளை காலை மணி 11.33 லிருந்து 15 நிமிடங்களுக்கு தொலைபேசி வழியாக கோலாலம்பூர் பாஸ் தலைமையகத்திலிருந்து நடத்தப் போவதாக மாபுஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

“என்ன நடக்கும் என்று நமக்கு நாளைக்குத்தான் தெரியும். இதுவரையில் நான் அவருடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளேன், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.

“இந்தத் தொலைபேசி வழியிலான செய்தியாளர் கூட்டம் பற்றி அறிவிப்பதற்கு முன்னதாக நான் அவரின் ஒப்புதலைப் பெற்றிருந்தேன்”, என்று மாபுஸ் மலேசியாகினியிடம் கூறினார்.