குடியேறிகளால் ஜெர்மனி பெரும் மாற்றமடையும்: அங்கேலா மெர்க்கெல்

merkel

ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை

ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார்.

அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும்.

குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு சட்டங்களை கடந்த வார இறுதியில் தற்காலிகமாக தளர்த்தியதன் மூலம் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தைத் தான் தடுத்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த வார-இறுதியில் மட்டும் 18 ஆயிரம் பேர் ஜெர்மனிக்குள் நுழைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை மேலும் பதினோறாயிரம் பேர் ஜெர்மனிக்குள் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஜெர்மானிய அரசத்தலைவி அங்கெலா மெர்கல் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறும் அவரது சொந்தக்கட்சியைச் சேர்ந்த பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களை அவர் சந்தித்துவருவதாக பெர்லினில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இருபதாயிரம் பேரை ஏற்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு

இதனிடையே, அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிரிய அகதிகள் இருபதாயிரம் பேரை பிரிட்டனுக்குள் மீளக்குடியமர்த்தப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் அகதிகளுக்கான திட்டத்தின் கீழ் பிரிட்டன் ஏற்கனவே வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக இந்தக் குடியமர்த்தல் நடைபெறும் என்றும் கெமரன் கூறியுள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே, அகதிகளை பங்கிட்டுக் கொள்ளும் புதிய யோசனைக்கு ஜெர்மனியுடன் இணங்கியுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் கூறியுள்ளார்.

இருபத்தி நான்காயிரம் பேரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் என்றும் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மீளக்குடியமர்த்தப் படுவார்கள் என்றும் ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். -BBC