‘இளவரசர் ஒரு கத்தோலிக்கர்’ எனப் பதிவிட்ட முன்னாள் மலாக்கா சிஎம் மன்னிப்பு கேட்டார்

ex-mசிலாங்கூர்  பட்டத்திளவரசர்  தெங்கு  அமிர்  ஷா  கிறிஸ்துவ  சமயத்தைத்  தழுவினார்  என்று  தம் முக நூல்  மற்றும்  டிவிட்டர்  பதிவுகளில்  கூறியதற்காக மலாக்கா  முன்னாள்  முதலமைச்சர்  ரகிம்  தம்பி  சிக்  மன்னிப்பு  கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர்  அரண்மனை  திங்கள்கிழமை போலீசில்  புகார்  செய்ததை  அடுத்து  இது  நடந்தது.

“டிவிட்டரிலும்  முகநூலிலும்  மேன்மை தங்கிய  சிலாங்கூர்  பட்டத்திளவரசர்  கத்தோலிக்கராக  மாறிவிட்டார்  எனப்  பதிவிட்டதன்  தொடர்பில்,  அது  வலைப்பதிவு  ஒன்றிலிருந்து  எடுக்கப்பட்ட  ஆதாரமற்ற  செய்தி  என்பதை  ஒப்புக்கொள்கிறேன்.

“அது பட்டத்திளவரசருக்கும்  இஸ்தானா  சிலாங்கூருக்கும்  ஏதாவது அசெளகரியத்தை ஏற்படுத்தியிருந்தால்  அதற்காக  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன்”, என  ரகிம்  அவரது  முகநூல்  பக்கத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

இளவரசர்  இஸ்லாத்திலிருந்து  வெளியேறி  விட்டார்  என்ற  வதந்தி  இணையத்தில்  சில  ஆண்டுகளாகவே  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.

அரண்மனை  அதை  மறுத்து  வந்திருக்கிறது.