தேவைப்பட்டால் நாங்கள் பெர்சத்துவை எதிர்த்துப் போட்டியிடுவோம் – பாஸ் துணைத் தலைவர் 

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் இரு அங்கத்துவக் கட்சிகளும் ஒரே தொகுதிகளில் மோத நேரிட்டாலும், பெர்சத்து  கட்சியுடன் போட்டியிடுவதில் தங்கள் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“ஒரே கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை இப்போதைக்கு சாதகமாகவே பார்ப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.”

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதிகளில் போட்டியிட்டால், பெர்சத்து கட்சியை எதிர்கொள்ள PAS தயாராக உள்ளது.

மாநிலத் தேர்தலில் பெகரிகத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் உள்ள தங்களின் கூட்டணி கட்சியான பெர்சாத்துவுக்கு எதிராகப் போட்டியிடுவதில் பாஸ் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதன் துணைத் தலைவர் அமர் அப்துல்லா கூறியதாக ‘சினார் ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் போட்டியிடும் அதே தொகுதிகளில் பெர்சத்து வேட்பாளர்களை நிறுத்தினால், நாங்கள் அவர்களுக்கு எதிராகப் போட்டியிடுவோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை”.

“போட்டி என்று வந்துவிட்டால், நாங்கள் களம் காண்போம்,” என்று கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள மேடான் இல்முவில் வெள்ளிக்கிழமை மத உரை நிகழ்த்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் பெர்சத்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய நேரடி மோதல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

PN கூட்டணியின் கீழ் போட்டியிடாமல், பெர்சத்து சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்தது குறித்துப் பேசிய அமர், இந்த நடவடிக்கை கூட்டணிக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் அமையலாம் என்றார்.

“நேர்மறையான பக்கத்தைப் பார்த்தால், வாக்காளர்களுக்குத் தெளிவான தேர்வு கிடைக்கும். ஆனால் எதிர்மறையான பக்கத்தைப் பார்த்தால், அது PN கூட்டணிக்கான வாக்குகளைப் பிரிக்கக்கூடும், ஏனெனில் பெர்சத்து இன்னும் கூட்டணியின் ஒரு அங்கமாகவே இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தற்போதைக்கு அவர் இந்தச் சூழ்நிலையை நேர்மறையாகவே பார்க்கிறார்.

“எனவே இதில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன, ஆனால் இப்போதைக்கு நான் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பாரிசான் நேஷனல் (BN) போட்டியிடாமல் விட்டுச்சென்ற 11 தொகுதிகளில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக PN நேற்று இரவு அறிவித்தது.

இதில், 2023-இல் வென்ற மூன்று தொகுதிகள் உட்பட மொத்தம் ஐந்து தொகுதிகளில் பாஸ் போட்டியிடும், அதைத் தொடர்ந்து வவாஸான் (Wawasan) நான்கு தொகுதிகளிலும், கெராக்கான் (Gerakan) மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பெர்சத்து தனது வேட்பாளர்களை இன்று மாலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முன்னதாக, பெர்சத்து (Bersatu) தலைவர் முகிடின் யாசின் (Muhyiddin Yassin), பெரிகத்தான் நேஷனல் (PN) தகவல் பிரிவு தலைவர் அன்னுவார் மூசா (Annuar Musa) கூறிய, தனது கட்சி “தன்னார்வமாக கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்தது” என்ற கருத்தை கடுமையாக விமர்சித்தார்.

தனது கட்சி பி.என். (PN) கூட்டணியில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் அந்தக் கூட்டணியின் சட்டபூர்வமான உறுப்பினர் கட்சியாகவே இருப்பதாக முகிடின் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பெர்சத்துவை PN சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதிக்க விரும்பாததால் தான், சொந்தச் சின்னத்தில் போட்டியிட பெர்சத்து முடிவு செய்தது என்று முகிடினின் முன்னாள் உதவியாளர் மர்சுகி முகமது தெரிவித்தார்.