ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு

punishment_001தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற பத்திரிகை சவுதி அரேபிய அரசு இந்த தண்டனையை அடுத்த சில நாட்களில் நிறைவேற்ற உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தேச துரோக செயல்களில் ஈடுபட்டது, தீவிரவாதத்திற்கு உதவியது, சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரிகளை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 55 கைதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு முதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 55 கைதிகள், 100 அப்பாவி மக்களையும் 71 பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த தண்டனை எந்த குறிப்பிட்ட நாளில் நிறைவேற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகாத நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அடுத்ததாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான இந்த அதிர்ச்சி செய்தியை தொடர்ந்து, சர்வதேச மன்னிப்பு சபையான அம்னிஸ்ட்டி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக போராடுகிறேன் என்ற பெயரில் அரசியல் லாபத்திற்காக இந்த மனித உரிமை மீறல்களை நிறைவேற்ற உள்ளதாக சவுதி அரேபிய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தொடக்கம் முதல் 150 கைதிகளை சவுதி அரேபியா அரசு பொது இடங்களில் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com