கேளாங் பாத்தாவில் மகாதிர்

dr mஅரசியலில்   எதுவும்  நடக்கும்.

2013   பொதுத்   தேர்தலின்போது   ஜோகூர்   பாருவுக்கு   வருகை   மேற்கொண்ட   முன்னாள்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   கேளாங்  பாத்தா    வாக்காளர்கள்  அத்தொகுதியில்   டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்    லிம்   கிட்  சியாங்கின்   அரசியல்   வாழ்க்கையைக்  குழிதோண்டிப்   புதைக்க   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டார்.

13வது   பொதுத்    தேர்தலின்   நான்காம்   ஆண்டுநிறைவான   நேற்றும்   அதே   கேளாங்   பாத்தாவுக்குச்      சென்றார்   மகாதிர்.  இப்போது  அவருடைய   பேச்சு   முற்றிலும்  மாறுபட்டிருந்தது.

டிஏபி-இன்   நிதிதிரட்டும்   விருந்தில்  கலந்துகொள்ளச்   சென்ற  மகாதிருக்கு   டிஏபி   ஆதரவாளர்கள்   அமோக   வரவேற்பைக்  கொடுத்தனர்.

விருந்தில்   உரையாற்றிய   மகாதிர்    டிஏபியின்   தேர்தல்   நிதிக்கு    தாராளமாக   பணம்  கொடுத்து   உதவுமாறு    கூட்டத்தினரைக்   கேட்டுக்கொண்டார்.

ஒரு  பொதுத்   தேர்தல்   முடிந்து   இன்னொரு   தேர்தல்    வருவதற்குள்   மிகப்  பெரிய   மாற்றங்கள்   நாட்டில்    ஏற்பட்டிருப்பதாக    முன்னாள்   பிரதமர்    கூறினார்.   சிலரால்   அம்மாற்றங்களை    ஏற்றுக்கொள்ள   முடியவில்லை.

“சீனர்கள் (சிலர்)  கிட்  சியாங்   அவர்களை   வஞ்சித்து   விட்டதாக   நினைக்கிறார்கள்    மலாய்க்காரர்கள் (சிலர்)  அவர்களை   நான்   வஞ்சித்து   விட்டதாக   நினைக்கிறார்கள்.  நாங்கள்   யாரையும்   வஞ்சிக்கவில்லை,  எல்லாம்   மலேசியர்களுக்காகத்தான்   பாடுபடுகிறோம்”,  என்றார்  மகாதிர்.

தம்  முன்னாள்   கட்சியான   அம்னோ,    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   தலைமையில்   களவாணி   அரசாங்கமாக   மாறி  விட்டது  என்றார்.

“அதற்காகத்தான்   நானும்   பார்டி   பிரிபூமி    பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)வும்   பக்காத்தான்   ஹராபான்  கூட்டணியில்   இணைந்தோம்.

“60  ஆண்டுகளாக   எதிரணியால்   கூட்டரசு   அரசாங்கத்தைக்  கைப்பற்ற   முடியவில்லை.

“இப்போது   ஒன்று  சேர்ந்திருக்கிறோம்.  தேர்தலிலும்   வெல்வோம்”,  என்று   கூறினார்.

கடந்த  காலங்களில்    டிஏபி-யை   ஒரு   பொல்லாத   கட்சி   என்றே  தாம்   கூறி  வந்ததைக்  குறிப்பிட்ட   மகாதிர்    அது   ஏன்   என்பதையும்   விளக்கினார்.

“கடந்த  காலத்தில்   என்னுடைய   அரசாங்கம்   டிஏபி-யை   இனவாதக்   கட்சி   என்றே   முத்திரை    குத்தி  வந்தது.

“அதெல்லாம்    அரசியல்-  வெற்றி  பெறுவதற்காக    அப்படியெல்லாம்   சொல்வோம்.

“பதிலுக்கு   நான்   ஒரு   தீவிரவாதி     என்று   அவர்கள்   முத்திரை   குத்தினார்கள்”,   என்று  மகாதிர்   சொன்னார்.

ஆனால்,  அதுவெல்லாம்   உண்மை   அல்ல,   அதனால்தான்   இப்போது   டிஏபி-யுடன்   ஒத்துழைக்க   முன்வந்திருப்பதாக     அவர்    குறிப்பிட்டார்.