நஜிப், தைரியம் இருந்தால் ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2. 0’ விவாத மேடைக்கு வாருங்கள், மகாதிர் சவால்

 

Nothingtodide“மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2. 0” என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்க வருமாறு மகாதிர் முகமட் பிரதமர் நஜிப்புக்கு சவால் விட்டிருக்கிறார்.

இன்று மாலை, ஒரு முகநூல் பதிவில், அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் எதிர்வினையாற்ற இச்சந்தர்ப்பத்தை நஜிப் நழுவ விடக்கூடாது என்று மகாதிர் கூறுகிறார்.

“நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்”, என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை பெர்சத்து இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக அவரது முகநூல் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறினார். எனினும், இதற்கான தேதியும் இடமும் தெரிவிக்கப்படவில்லை.

“இந்த இரண்டாவது ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி எனக்கு எதிராக எறியப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் பற்றி விளக்கம் அளிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அதே சமயம், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க நஜிப்புக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

“இதனால், நாங்கள் அளித்த விளக்கங்கள் உண்மையா அல்லது இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கலாம்”, என்றாரவர்.