நஜிப்பின் பிணைக்கு நிதி திரட்டும் பெக்கான் அம்னோ வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கட்ட வேண்டிய பிணைக்கு நிதி திரட்ட உதவுவதற்காக பெக்கான் அம்னோ தொகுதித் தலைவர் திறந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது பற்றி இன்று காலை தெரிந்து கொண்டதாக பெக்கான் வனிதா அம்னோ தலைவர் ஸால்மா அப்துல் ரஹ்மான் கூறினார்.

இது (கணக்கு முடக்கப்பட்டது) பெக்கானில் மட்டும்தான். இதர இடங்கள் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்தக் கணக்கு பெக்கான் அம்னோ தொகுதியால் திறக்கப்பட்டது என்று அவர் கூறியதாக மலே மெயில் செய்தி கூறுகிறது.

எனினும், கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ரஸ்லான் ரபி தொடங்கிய நிதி திரட்டல் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக அண்மையில் திரட்டப்பட்ட நன்கொடைகள் திங்கள்கிழமைதான் எண்ணப்படும் என்று ரஸ்லான் மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று மாலை மணி 5.00 அளவில் திரட்டப்பட்டது ரிம233,908 ஆகும்.

நஜிப்புக்கு விதிக்கப்பட்ட ரிம1 மில்லியன் பிணையின் இரண்டாவது பகுதியைக் கட்டுவதற்கு அவருக்கு உதவுவதற்காக இந்நிதி திரட்டப்படுகிறது.