ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு

டப்ளின், அயர்லாந்தை சேர்ந்த விமான நிறுவனம், ரயனயிர். இந்த விமான நிறுவனம், ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த விமான நிறுவன ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் சுமார் 400 விமானங்களின் சேவை ரத்தானது. இதனால் ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், 85 சதவீத விமானங்கள் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல இயங்கத் தொடங்கி விடும் என்றும் ரயனயிர் நிறுவனம் அறிவித்து உள்ளது.

-dailythanthi.com