கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் இருந்தாக வேண்டும்

மக்களவை கேள்வி-பதில் நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவைத்தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் புதிய விதி செய்தார்.

“அவை நிலை ஆணைகளின்படி ஒரு கேள்விக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோதான் பதிலளிக்க வேண்டும்”, என்றாரவர்.

வீ கா சியோங்(பிஎன் -ஆயர் ஈத்தாம்), உள்துறை அமைச்சிடம் கேட்ட கேள்விக்கு பொருளாதார துணை அமைச்சர் முகம்மட் ராட்சி முகம்மட் ஜிடின் பதிலளித்தது குறித்து முறையிட்டதை அடுத்து இப்புது விதி கொண்டுவரப்பட்டது.

அக்கேள்வி கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளிக்க உள்துறை அமைச்சர் முகைதின் யாசினோ துணை அமைச்சர் அசிஸ் ஜம்மானோ அவையில் இல்லை.

அதைக் கண்டு வீ அதிர்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

“சில அமைச்சர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை நானறிவேன். ஆனால், பதிலளிக்க துணை அமைச்சராவது இருக்க வேண்டும்.

“இருக்கும் நிலைமை அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது”, என்று வீ கூறினாராம்.