30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்தது சீனா!

தைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை அழித்தனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தை தங்களது பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இந்திய தலைவர்கள் அருணாசலபிரதேசத்துக்கு செல்கிறபோது, சீனா அதனை கண்டித்து தனது எதிர்ப்பை முன்வைக்கிறது. அதே சமயம் அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதேபோல், தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சீனா கூறிவருகிறது. இதன்காரணமாக சீனாவில் தயார் செய்யப்படும் உலக வரைபடங்களில் அருணாசலபிரதேசம் மற்றும் தைவான் அந்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், தைவானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக கூறி சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றை அழித்தனர். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரைபட சந்தையில் சீனா என்ன செய்ததோ அது முற்றிலும் சட்டபூர்வமானதும் அவசியமானதுமாக இருந்தது. ஏனென்றால் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானவை ஆகும்” என்றார்.

-athirvu.in