நேட்டோ- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும்: அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி நம்பிக்கை!

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உக்ரைன் இணையும் என புதிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைனின் அதிபராக பதவியேற்ற விளாமிடிர் செலன்ஸ்கி, தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரசல்ஸ் நகரில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், நேட்டோ ராணுவ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாடு உறுப்பினராக இணையும் என இன்னும் நம்புவதாக தெரிவித்தார். மேலும் அண்டை நாடான ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் கூறினார்.

“ரஷ்யாவின் ஆயுத அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். கிழக்கு உக்ரைனில் மோதல் முடிவுக்கு வருவதற்காக, மின்ஸ்க் ஒப்பந்தத்தை மதிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் உடனிருந்தார்.

நேட்டோவில் உறுப்பினர் ஆவதற்கு உக்ரைன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in