இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பலை கக்கியது.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது.

ஜகார்த்தா : இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் நாடுகளில் தீவுகளாலான இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்குள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை நேற்று வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது. அங்கிருந்து 3 கி.மீ. தூரமுள்ள கிராமங்கள் வரை சாம்பல் புகை மற்றும் மணல் மழைபோல பெய்தது.

எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதால் ஏற்கனவே அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் சிவப்பு எச்சரிக்கை குறியீடு விடுக்கப்பட்டு இருப்பதால், எரிமலையை சுற்றியுள்ள பாதையை விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் மொத்தம் 353 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

maalaimalar