பர்கினோ பசோ: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராமத்தினர் மீது துப்பாக்கிச்சூடு – 43 பேர் பலி

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராமத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

ஒவ்கடங்கு: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களுக்கு பர்கினோ பசோவில் உள்ள சில கிராமங்கள் ஆதரவு அளித்துவருகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் யடங்கா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த பர்கா மற்றும் டின்குய்லா ஆகிய இரண்டு கிராமங்களுள் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத செயல்களுக்கு எதிரானவர்களே இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

maalaimalar